அறிவோம் அறிவியலை -எள்ளு

Sankar sundaralingam
3 min readApr 29, 2023

--

‘இளைத்தவனுக்கு எள்ளு; கொழுத்தவனுக்கு கொள்ளு’ — பழமொழி

இதன் அர்த்தம் உடல் இளைத்தால் எள்ளு உணவு சாப்பிட வேண்டும். உடல் கொழுத்தால் கொள்ளு உணவை சாப்பிட வேண்டும். இரண்டும், உடலை ஆரோக்கிய நிலையில் பேணும் என்பது தான் இதன் பொருள்.

எள் ஒரு மருத்துவ மூலிகை. எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன.

- கருப்பு எள்ளில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளது.

- வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.

எள்ளில் ஒன்பது வகைகள் உண்டு. கார எள், சிகப்பு எள், வெள்ளை எள், காட்டு எள், மயில் எள், பேய் எள், காட்டு மயில் எள், மலை எள், சிற்று எள் என்பதாகும். எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண்டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. எள்ளை திலம் என்றும் அழைப்பர்.

எள் பழங்காலம் முதல் பயன்படுத்தப்படும் ஒரு உணவு பொருளாக இருக்கிறது. இது உலகம் முழுவதும் உணவுக்கும், மருத்துவத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. எந்த ஒரு பலகாரத்திலும் கொஞ்சம் எள்ளை சேர்த்து சமைக்கும் பழக்கத்தை, கொண்டிருந்தனர், நம் முன்னோர் உதாரணத்துக்கு, முறுக்கு, சீடை, ஓட்டை வடை, எள்ளு உருண்டை என, இப்படி விதவிதமான பண்டங்களில் எள்ளை சேர்க்கும் பழக்கம், அன்று முதல் இன்று வரை கடைப்பிடித்து வருகிறோம்.

எள் விதைகளில் இருந்து பிழிந்து எள்நெய் பெறப்படுகிறது. எள்நெய் என்பதே எண்ணெய் என மருவியது. மற்ற தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளை விட எள்ளின் மூலம் பெறப்படும் எண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டது. அதனால் தான் எள்நெய்யை நல்லெண்ணெய் என்று கூறுகிறோம்.

எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

எள்ளில் 20 விழுக்காடு புரதமும், 50விழுக்காடு எண்ணெயும், 16 விழுக்காடு மாவு பொருட்களும் உள்ளன. எள்ளு விதைகளில் அதிகமாக இருக்கும் மக்னீசியம் ரத்த அழுத்த நோயை குறைக்க உதவும் சத்துகள் நிறையவே இருக்கின்றன. எள்ளுருண்டையில் துத்தநாக சத்தும், இரும்பு சத்தும் இருக்கிறது. பொதுவாக எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சிய சத்தும், மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, ஈ, இரும்பு சத்தும் உள்ளன என ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

ஆராய்ச்சியில் எள் மற்றும் எள்நெய் சர்க்கரை நோயை தடுப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

எள்ளின் மருத்துவ பயன்கள்:

குடல் சார்த்த நோய்களை குணமாக்கும் ஆற்றல் பெற்றது: தினமும் ஒரு ஸ்பூன் எள்ளு விதைகளை சாப்பிட்டு வந்தால் குடல் சார்ந்த பிரச்சினைகளை சரியாகும் மற்றும் குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது.

எள்ளின் விதையை வெல்லப்பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலநோயினை குணமாக்கும். எள்ளின் இலைகள் குடல் நோய்களுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. எள் இலையை அரைத்து அதனை உண்பதால் குடல் நோய்களுக்கு தீர்வு காணலாம். இதன் இலைகளை கசாயம் வைத்து குடிக்கின்றனர். எள் இலைகளுடன் வெண்ணெய் வைத்து அரைத்து உண்பதால் ரத்த மூலநோய் குணமாகும்.

கண், தோல் பாதுகாக்க : தோலில் ஏற்படும் சொறி, சிரங்கு, புண்களை போக்க எள்ளு விதையை அரைத்து பூசி வர படிப்படியாக குணமாகும்.

எள்ளின் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வரும் சாரை எடுத்து முகம் கழுவினால் முகம் பொலிவோடும், கண்கள் ஒளி பெறவும், கண் நரம்புகள் பலப்படுத்தி நலமாக்கும்.

நல்லெண்ணெய் ( எள்நெய்) கபால சூடு, காது வலி, சிரங்கு, புண் போன்றவற்றை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. எள்ளின் நல்லெண்ணெயை இரு கண்களிலும் விட்டு, தலையில் தடவி சுடுநீரில் மூன்று நாட்கள் தலை முழுகிவர சிவந்த கண், கண் வலி, கண்ணில் நீர் வடிதல், கண் கூச்சம், மென்மை குத்தல் ஆகியவை தீரும்.

எலும்புகள் ஆரோக்கியத்திற்கு : எள்ளில் உள்ள துத்தநாக சத்து மற்றும் ஜிங்க் ஆகியவை எலும்பில் உள்ள தாதுக்களின் அளவை அதிகரிப்பதோடு எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எள் விதைகளில் கால்சியம் சத்து நிறைந்து காணப்படுவதால் எலும்பின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் இதை உட்கொள்வதால் உடலுக்கு கிடைக்கிறது.

மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும். வயதானவர்கள் எள்ளுருண்டையை சிறந்த உணவாக எடுத்துக்கொள்ளலாம். இதனால் எலும்புகள் பலமடையும், ஆரோக்கியத்தை தரும்.

சர்க்கரை நோயை தடுக்கிறது: எள்ளில் மெக்னீசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் சர்க்கரை நோயை எதிர்த்து போராட உதவுகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்க நல்லெண்ணையை பயன்படுத்தலாம்.

உடல் பலம் அதிகரிக்க: சுடுநீரில் சிறிதளவு எள்ளிலை போட்டு குளியல் செய்ய உடல் வலிகளை போக்கும் சக்தி எள் குளியலில் ஆரோக்கியம் காணமுடியும்.

உடல் சோர்வாக காணப்பட்டால் எள்ளை பொடியாக்கி சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர உடல் சோர்வு நீங்கி உடல் பலம் அதிகரிக்கும்.எள் பொடியுடன் கறிவேப்பிலை பொடி சேர்த்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட உடல் உறுதி பெறும்

எள்ளை செக்கிலிட்டு ஆட்டி எண்ணெய் எடுத்த பின் எஞ்சிய சக்கையினை பிண்ணாக்கு என்பார்கள். இதில் ஏராளமான சத்துகள் நிறைந்திருப்பது பலருக்கும் தெரியாது. கீரைகளுடன் எள் பிண்ணாக்கு சிறிதளவு சேர்த்து உண்பது நல்ல சுவையைத் தரும். இது மனிதர்களுக்கு ஆரோக்கிய பலம் கூட்டும். மாடு, ஆடு போன்ற விலங்குகளுக்கு அதிகப்படியான உணவாக எள் பிண்ணாக்கு பயன்படுத்தப்படுகிறது.

பனை வெல்லம், கருஞ்சீரகம், எள்ளுடன் சேர்த்து சாப்பிட்டு வர பெண்களுக்கு மாதவிடாய் கால பிரச்சினைகளைத் தீர்க்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் ஏ, பி போன்றவை உள்ளன. இதை சரியான அளவில் எடுத்துக் கொண்டால் பலன் முழுமையாக கிடைக்கும்.

கருப்பு எள், புற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும்; மூளை செல்களை மறு உற்பத்தி செய்யும் என ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் வரவிடாமல் நம்மை காப்பதற்கு மிக முக்கிய காரணம், ‘சீசமின்’ என்ற மூலக்கூறு தான். இது, எள்ளில் உள்ள முக்கிய மூல பொருள் ஆகும்.

எளிய சிறுதானியமான எள்ளை பயன்படுத்துவதால் ஏராளமான நன்மைகள்.

--

--

No responses yet