அறிவோம் அறிவியலை — வல்லாரை
மருத்துவ மூலிகை பொருள்களில் ஒன்று வல்லாரை. வல்லமை மிக்க கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது.
“வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே” என்ற பழமொழியின் அர்த்தம் என்னவென்றால் மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை கொண்ட வல்லாரையை சாப்பிட்டவர்களிடம் போராட முடியாது.
“வல்லாரை வெல்ல வல்லாரை உண்க”- வல்லவர்களை வெல்ல வேண்டுமென்றால் வல்லாரை சாப்பிடவும்.
வல்லாரைக்கீரையில் வைட்டமின் A, C, ஈரம், புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, சர்க்கரை சத்து, இரும்பு, சுண்ணாம்பு சத்து,மனிச்சத்து அதிகமாக உள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரியான அளவில் இந்த கீரை கொண்டுள்ளது. வல்லாரையின் இலைகள் உட்பட முழுத் தாவரமும் உணவாகவும், மருத்துவத்திலும் பயன்படுகிறது.
வல்லாரையில் இலை பெரிதாக உள்ள இனம், இலை சிறிதாகவும் வேர் அதிகமாக உள்ள இனம் என இருவகை உண்டு. வேர் அதிகமாகவும், இலை சிறியதாகவும் உள்ள இனம் மருத்துவ குணம் அதிகம் கொண்டது
வல்லாரைக்கீரையை சரஸ்வதி கீரை,யோசனை வல்லி என்றும் சொல்வார்கள்.
தலை முதல் கால் வரை வரக்கூடிய எல்லா வகை நோய்களுக்கும் இது மருந்தாவதால் இதை சர்வ ரோக நிவாரணி என்றும் அழைப்பர்.
வல்லாரையின் மருத்துவ பயன்கள் :-
நினைவுத்திறன் அதிகரிக்கும்:
ஞாபகசக்தியை அதிகரிக்கிறது.உணவில் அடிக்கடி வல்லாரை சேர்த்து கொள்ளும் போது சிறு குழந்தைகளுக்கு நினைவுத்திறன் அதிகரிக்கும். வயதான காலத்துக்கு பிறகு மறதி நோய் வரும் வாய்ப்பு குறையும். வல்லாரை ஞாபக சக்தியை மேம்படுத்துவதால் இது சரஸ்வதி கீரை என்றும் அழைக்கபடுகிறது. வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தக் கூடியதாக விளங்குகிறது. வல்லாரை கீரை நரம்பு தளர்ச்சியை குணமாக்கி, மூளைச் சோர்வை நீக்கி மூளையின் சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்.
பற்களை பாதுகாக்கும்:
வல்லாரை கீரையை கொண்டு பல்துலக்கினால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் தன்மை நீங்கும்.மேலும் பல் ஈறுகள் பலப்படும். வல்லாரை கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் காலையும், இரவும் பற்களில் தேய்த்து வந்தால் பற்களில் இருக்கும் கறைகள் காணாமல் போகும்.
பார்வைத்திறன் அதிகரிக்க:
கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை போக்கி கண் நரம்புகளுக்கு பார்வைத்திறனை அதிகரிக்கிறது.கண்களில் உஷ்ணத்தில்னால் உண்டாகும் சிவப்பு, கண்களில் நீர் வடிவது போன்ற பிரச்சனைகளை ஆரம்பத்தில் கண்டறிந்தால் வல்லாரையை கொண்டு குணப்படுத்திவிட முடியும்.மங்களான பார்வையை சரி செய்யும்.
குடல் புண், வாய் புண் ஆறும்:
வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை நீங்கும்.
வல்லாரை இலை நான்கை எடுத்துவெறும் வயிற்றில் காலையும் மாலையும் மென்று வாய்ப்புண்ணில் படும்படி மென்று சாப்பிட்டு வந்தால் புண் ஆறும்.
வயிற்றில் புண் இருந்தாலும் குடலில் புண் இருந்தாலும் பச்சை இலையை மென்று சாப்பிட்டு வந்தால் குடல் புண் ஆறக்கூடும். வல்லாரையை மென்று சாப்பிட முடியாதவர்கள் வல்லாரையை துவையலாக்கி சாப்பிடலாம். கண்டிப்பாக பலன் கிடைக்கும். இது மட்டுமில்லாமல் வல்லாரை கீரை உடலில் ஏற்பட்ட புண்களை ஆற்றும்.
ரத்த சோகை தவிர்க்கும்:
வல்லாரை கீரையானது இரத்தத்தை சுத்திகரிக்கிறது, இன்று பலருக்கும் இருக்கும் பிரச்சனையில் ரத்த சோகையும் அடங்கும். குறிப்பாக இளவயதினரிடம் ஹீமோகுளோபின் பற்றாக்குறை அதிகரித்துவருகிறது. வல்லாரை ஹீமோகுளோபின் அளவை கணிசமாக அதிகரித்து ரத்த சோகை வராமல் தடுக்கிறது.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதன் மூலம் ரத்த சோகை வராமல் தடுக்கப்படுகிறது. ரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்கிறது.
பல்வேறு நோய்களை தீர்க்கும் ஆற்றல் கொண்டது:
- உடலில் கட்டிகளால் உண்டாகும் வீக்கம், கட்டிகளில் மீது வல்லாரை இலையை அரைத்து பற்றுபோடுவதன் மூலம் வீக்கம் குறையக்கூடும்.
- வல்லாரை கீரை பொதுவாக இருதய பலத்துக்கு உதவுகின்றது.
- வல்லாரை கீரை தொண்டைக்கட்டு, காய்ச்சல், சளி குறைய உதவுகிறது.
- வல்லாரை இலையை உலர்த்தி நன்குப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்துபோகும்.
- உடற்சோர்வு சம்பந்தமான நோய்கள் மற்றும் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்களை குணமாக்கும்.
- வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.
- வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரை மறைந்து இளமை தோற்றம் திரும்பும்.
- அஜீரணக் கோளாறுகளை சரி செய்யும். பால்வினை நோய்கள், வெண்குஷ்டம் போன்ற நோய்களுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.
- யானைக்கால் நோய் உள்ளவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் எளிதில் குணமாகும். வல்லாரை கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகி விடும்.
- பிரசவத்திற்கு பின் தாயின் உடல்நிலை தேறுவதற்கு வல்லாரை இலைகளை இடித்து சாறெடுத்து, பனங்கற்கண்டோடு சேர்த்து கொடுக்கலாம்.
- நரம்புத் தளர்ச்சி, தாது விருத்திப் பிரச்சனை, காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளித் தொல்லை, சிறு நீர்க் கோளாறு போன்றவற்றை குணப்படுத்துகிறது.
சித்த மருத்துவர்கள் லேகியம், சூரணம், மாத்திரை போன்ற வடிவங்களில் பக்குவப்படுத்தி மருத்துவத்தில் பயன்படுத்துகிறார்கள்.