கதை கேளு -முள்ளில்லா ரோஜாக்கள் இல்லை!!!
துன்பம் இல்லாத வாழ்க்கை இல்லை!!!
அடர்ந்த காட்டில் குட்டி புள்ளிமான்கள் விளையாடிக் கொண்டிருந்தது. அதனை தாக்க புலி முயன்றது. புலியிடமிருந்து வேகமாக ஓடி தப்பித்துக் கொண்ட புள்ளி மான் குட்டிகள் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், அவ்வழியாக வந்த காட்டு ராஜா சிங்கம் அதனை தாக்க முயன்றது. மீண்டும் ஓடி தப்பித்தது புள்ளிமான்கள். ஓட்டத்தால் அதிக தண்ணீர் தாகம், தண்ணீர் குடிக்கலாம் என எண்ணி ஆற்றங்கரைக்கு சென்றது. தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த புள்ளிமான்களை முதலைகள் தாக்க முயற்சித்தது.
அங்கிருந்து தப்பித்து சோர்வடைந்து உட்கார்ந்து கொண்டிருந்தது. அவ்வழியாக வந்த யானை, புள்ளிமான்களை பார்த்து எப்படி இருக்கிறீர்கள் என கேட்க?
புள்ளிமான்கள்: எங்கள் வாழ்க்கை துன்பம் நிறைந்தது. எப்போ பார்த்தாலும் போராட்டம், தினந்தோறும் எங்களை நாங்கள் புலி, சிங்கம், நரி , முதலைகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதே பெரிய வேலை. இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் அவைகள் எங்களைக் கொன்று விடும். பயந்து பயந்து வாழ்வதைவிட ஒரேடியாக போய்விடலாம்.
யானை புள்ளிமான்களை பார்த்து பயப்படாதீர்கள். உங்களுக்கு மட்டுமல்ல இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இன்பம், துன்பம் என இரண்டுமே உண்டு.
புள்ளிமான்கள்: எங்களுக்குத் துன்பம் மட்டும் தான் வருகிறது. எப்போ பார்த்தாலும் எங்களை தாக்க புலி, சிங்கம், நரி போன்றவை முயல்கிறது.
யானை : நீங்கள் முள்ளில்லா ரோஜாக்களை பார்த்து இருக்கிறீர்களா?
புள்ளிமான்கள்: இல்லவே இல்லை
யானை : அது போல தான். துன்பம் இல்லாத வாழ்க்கை இல்லை.
நாம் நடக்கும் பாதை மலர்மீது அமைய வேண்டும் என்பதில் தவறில்லை ஆனால் அதில் உள்ள ஒரு முள்ளை கூட மிதிக்க கூடாது என நினைப்பது தவறு.
முள் இல்லாமல் ரோஜா மலர்கள் இல்லை,
துன்பம் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
நீங்கள் எப்போதும் விழிப்புடன் கூட்டமாக இருக்க வேண்டும். உங்களை எதிரிகள் தாக்கும் போது ஒருவருக்கொருவர் துணைகொண்டு எதிர்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் ஒரு நாள் எல்லாம் மாறும், ஒரே நாளில் எல்லாம் மாறாது.
யானையின் அறிவுரையை கேட்ட மான்கள் புத்துணர்ச்சியுடன் எழுந்து, யானைக்கு நன்றி கூறி தனது இருப்பிடத்தை நோக்கி சந்தோசமாக சென்றது.
கதை கருத்து:
புண் இல்லாத போராட்டம் இல்லை
நெருப்பு இல்லாத வேள்வி இல்லை
நண்பர்கள் இல்லாத மனிதர்கள் இல்லை
இறப்பு இல்லாமல் பிறப்பு இல்லை
முள்கள் இல்லாமல் ரோஜா இல்லை
இடி,மின்னல்கள் இல்லாமல் மழைகள் இல்லை
இன்பம்,துன்பம் இல்லாமல் வாழ்க்கை இல்லை
இடி, மின்னல்களைத் தவிர்த்து மழையை ரசிப்பது போல, இன்ப, துன்பங்களை தவிர்த்து வாழ்க்கையை ரசித்து வாழ வேண்டும்.
துன்பம் இல்லாத வாழ்க்கை உப்பு இல்லா உணவு போன்றது. இன்ப,துன்பங்கள் நிறைந்த வாழ்க்கை முழு விருந்து.
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே — பெஞ்சமின் .